×

தாறுமாறாக ஓடிய கார், பைக் மீது மோதல்; வேலூரை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு

குடியாத்தம், மே 5: குடியாத்தம் நகைக்கடை பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் பைக் மீது மோதியது. மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய 3 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் எஸ்ஐ ரஜினி மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் நேதாஜி சிலை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆம்பூர் சாலையில் இருந்து வந்த காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. தொடர்ந்து அந்த கார் ஒரு வழிப்பாதையான நகைக்கடை பஜார் வீதி வழியாக எதிர் திசையில் சென்றது.

அப்போது தாறுமாறாக ஓடிய கார் பைக்கில் சென்றவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் சென்றவர் கீழே விழுந்து காயமடைந்தார். தாறுமாறாக கார் வருவதை கண்டு சாலையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓரமாக சென்றனர். இதற்கிடையில் போக்குவரத்து போலீசார் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டி வந்து அரை கி.மீ. தூரத்தில் பஸ்நிலையம் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர். பின்னர் அதனை குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று காரில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த அன்பு, ஆனந்த், சதீஷ் என்பதும், இவர்கள் 3 பேரும் ஏலகிரிக்கு சுற்றுலா சென்று திரும்பி குடியாத்தம் வழியாக வந்ததும், அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலா ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post தாறுமாறாக ஓடிய கார், பைக் மீது மோதல்; வேலூரை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Gudiatham ,Vellore District ,Kudiatham ,DSP ,Ravichandran ,Traffic Inspector ,Mukesh Kumar ,Dinakaran ,
× RELATED கோடை மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் குடியாத்தம் அருகே